Saturday, March 20, 2010

ஆளாளுக்கு மயக்கம்: ஐஸ்வர்யாராய்க்கு வெட்கம்



இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் ரெட்டச்சுழி என்ற படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் டைரக்டர்கள் கே.பாலச்சந்தர், பாரதிராஜா ஆகிய இருவரும் இணைந்து நடித்து இருக்கிறார்கள். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று இரவு நடந்தது.


பாடல்களை நடிகை ஐஸ்வர்யாராய் வெளியிட, கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டார்.


இவ்விழாவில் பேசிய ஐஸ்வர்யாராய், ‘’என் வாழ்க்கையில் இது ஒரு மறக்க முடியாத நாள். இந்த மேடையில் எல்லோரும் என்னை புகழ்ந்து பேசினார்கள். ஆனால் பாலச்சந்தர், பாரதிராஜா, ஷங்கர், வைரமுத்து போன்ற மேதைகள் அமர்ந்து இருக்கிற மேடையில் நானும் இருப்பதை என் வாழ்நாள் சாதனையாக கருதுகிறேன்.


தமிழ் சினிமாவில் நானும் ஒரு அங்கமாக இருப்பதை நினைக்கும்போது, பெருமையாக இருக்கிறது. தமிழ் மக்கள் என் மீது செலுத்துகிற அன்பு, எனக்கு உற்சாகம் அளிக்கிறது’’என்று தெரிவித்தார்.


விழாவில், கே.பாலச்சந்தர் பேசும் போது,


’’ஐஸ்வர்யாராய் அருகில் நான் அமர்ந்திருந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்த கிழவனுக்கு என்ன ஆசை என்று நினைக்கக்கூடாது. அழகை ஆராதிக்க வயசு தேவையில்லை. யார் வேண்டுமானாலும் ஆராதிக்கலாம். ஆனால் ஆராதிப்பதுடன் விட்டுவிட வேண்டும்.


பாரதிராஜாவுடன் நான் நடித்தது, ஒரு இனிய அனுபவம். இரண்டு இயக்குனர்கள் சேர்ந்து நடித்தால், மோதல் வரும். ஆனால், இந்த படத்தில் நடித்தபோது சந்தோஷமாக இருந்தது’’என்று தெரிவித்தார்.


பாரதிராஜா பேசும்போது,


’’ஒரு புலியையும், சிங்கத்தையும் வைத்து டைரக்டர் தாமிரா எப்படி வேலை வாங்கினார் என்று இங்கே பேசினார்கள். இந்த படத்தில் நானும், பாலச்சந்தரும் நடித்தபோது எங்களை மறந்து, ஆட்டுக்குட்டிகள் போல் இருந்தோம். பாலச்சந்தர் படித்தவர். நான் பாமரன். அவர் நேர்த்தியானவர். நான் காட்டுப்பூ மாதிரி.


சினிமாவில், என்னை முதன்முதலாக அங்கீகரித்த மனிதர், பாலச்சந்தர். அவருடன் இணைந்து நடித்தது, என் வாழ்நாள் சாதனை. நான் பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளும்போதெல்லாம் எனக்கு கை கொடுத்த மனிதர், பாலச்சந்தர்’’என்று தெரிவித்தார்.


டைரக்டர் ஷங்கர் பேசும்போது, ’’இந்த படத்தை தயாரித்ததை பெருமையாக கருதுகிறேன். கே.பாலச்சந்தரும், பாரதிராஜாவும் எனக்கு கிடைத்த பாக்கியம். ஐஸ்வர்யாராய் அழகானவர் மட்டுமல்ல. சிறந்த அறிவாளி. கடுமையான உழைப்பாளி. `எந்திரன்' படப்பிடிப்புக்காக தென் ஆப்பிரிக்கா சென்றபோது, பயங்கர பூச்சிகள் கடித்து அவர் கையில் வடுக்கள் ஏற்பட்டன. வேறு ஒரு நடிகையாக இருந்தால், தொடர்ந்து நடித்திருக்க மாட்டார். ஆனால் ஐஸ்வர்யாராய், பாடல் காட்சி முழுவதும் படமாவதற்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அவருடைய உழைப்பே அவரை அழகி ஆக்கியிருக்கிறது’’என்றார்.


இயக்குநர் பார்த்திபன் ஐஸ்வர்யாராயை ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப புகழ்ந்து தள்ளினார். தான் புகழ்ந்து தள்ளுவது எங்கே ஐஸ்ஸூக்கு புரியாமல் போய்விடுமோ என்று நினைத்து தான் பேசுவதற்கு முன் தனது பேச்சை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கொடுத்துவிட்டார்.


ஆளாளுக்கு மயக்கம் கொண்டதில் ஐஸ்வர்யாராய்க்கு வெட்கம்.

No comments:

Post a Comment